ரூ. 26 கோடியில் அழகுபடுத்தப்பட்ட
மெரினா கடற்கரையை முதல்வர் இன்று திறக்கிறார்
சென்னை, டிச. 20:
உலகின் 2வது நீண்ட கடற்கரை என்று சென்னை மெரினா கடற்கரைக்கு பெருமை உண்டு. மெரினா கடற்கரையை அழகுபடுத்த ரூ.25.92 கோடி ஒதுக்கப்பட்டு, கடந்த 2008&ம் ஆண்டு பிப்ரவரியில் பணிகள் தொடங்கின. தற்போது இப்பணிகள் முடிக்கப்பட்டு கடற் கரையை முதல்வர் கருணாநிதி இன்று திறந்து வைக்கிறார்.
அழகுபடுத்தப்பட்ட கடற்கரையில் வண்ண விளக்குகள், காந்தி சிலை அருகே நீரூற்றுகள், பொதுமக்கள் அமர கருங்கற்களாலான மேடைகள், காமராசர் சாலையை ஒட்டிய நடைபாதை கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளன.
ஸ்டீல் கைப்பிடி தடுப்புகள், அதை ஒட்டி வண்ணவண்ண பூச்செடிகளுடன் கூடிய பசும் புல்தரைகள், காலை மற்றும் மாலை நேரங்களில் கடற்கரையில் நடைபயில வருபவர்களுக்கு உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலைவரை தடையற்ற அழகிய பாதை, கடற்கரை சாலை முழுவதும் நவீன பஸ் நிறுத்தங்கள், கடற்கரைக்கு வரும் பொதுமக்களின் இயற்கை உபாதைகளை போக்க நவீன கழிப்பிடங்கள்.
கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதிகள் என சுற்றுலா பயணிகளுக்கும், சென்னை மக்கள் பொழுது போக்க ஏற்ற அழகிய இடமாகவும் சென்னை மெரினா கடற்கரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
நவீன வசதிகளுடன் அழகுபடுத்தப்பட்ட மெரினா கடற்கரையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் கருணாநிதி இன்று காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

உலக தரத்துக்கு இணையாக ரூ. 26 கோடியில் அழகு படுத்தப்பட்ட மெரினா கடற்கரை

